தங்கப் புலம்பல்...


பல முதிர் கன்னிகளை உருவாக்கிய பெருமையும், சில கோடீஸ்வரப் பெண்களின் கழுத்தை கிலோ கணக்கில் அலங்கரிக்கும் மஞ்சள் உலோகமாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தங்கம், இன்று சிறந்த முதலீட்டுத் தளமாக மாறி சில குழப்பங்களையும் விளைவித்துக் கொண்டிருப்பதால் இந்தப் பாமரன் தனக்குள்ளே புலம்ப ஆரம்பித்து விட்டான். அந்தப் புலம்பலை கேளுங்கள்.

"எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டுல, டவுனு பக்கம் போயி பங்குச்சந்தையில வேல பார்க்கிறவரு இருக்காரு... அவரு நேத்து ஒரு விசயம் சொன்னாரு. அதாவது 'தங்கம் ரேட்டு சீக்கிரமே ரூபாய் ரெண்டாயிரத்தை தொட்டுடும். அதனால ஒம்பொண்ணுக்கு இப்பவே பவுனு சேர்க்க ஆரம்பி' அப்படின்னாரு. எம்பொண்ணுக்கு இப்பத்தான் ரெண்டு வயசு ஆகுது. இவரு சொல்லறத பார்த்தா எம்பொண்ணு கல்யாண வயசுல கிராம் அஞ்சாயிரத்தை தொட்டுடும் போல. கொஞ்ச நாளைக்கு முன்னால கிராம் விலை சீக்கிரமே இறங்கி எட்டுநூறு ரூபாய்க்கு வந்துடும்... அமெரிக்காவில பேங்கெல்லாம் திவாலா ஆயிடுச்சு. அவங்க நஷ்டத்தை சரி கட்டறதுக்கு கையில வச்சிருக்கிற தங்கத்தையெல்லாம் விக்க ஆரம்பிப்பாங்க. அப்ப தங்கம் விலை குறையும்னு சொன்னாங்க. அது போக இந்தோனேசியாவோ தாய்லாந்தோ ஏதோ ஒரு நாட்டை சொல்லி அங்கே இருக்கிற தங்கச்சுரங்கத்தில வேலை பார்க்கிறவுங்க ஸ்ட்ரைக் பண்றதால தங்க உற்பத்தி குறைஞ்சிருக்கு. அவங்க ஸ்ட்ரைக்கை வாபஸ் பண்ணிட்டு வேலை பார்க்க ஆரம்பிச்சா தங்கம் ரேட் குறையும்னு சொன்னாங்க. நான் அரைப்பவுன் தோடு வாங்கப் போனவன் இதை கேட்டு கொஞ்ச நாள் பொறுத்து வாங்கிக்கலாம்னு இருந்துட்டேன். அன்னைக்கி விலை ஒரு கிராம் ஆயிரத்தி அம்பது ரூபாய். இன்னைக்கி ரேட் ஒரு கிராம் ஆயிரத்தி முன்னூறு ஆயிடுச்சு. இருநூற்றி அம்பது ரூபாய் குறையும்னு பார்த்தா ஏறிடுச்சு. எங்களை மாதிரி கூலி வேலை செய்யிறவுங்க கொஞ்சம் கொஞ்சமா பவுனு சேர்க்கலாம்னு பார்த்தா அதையும் சரியா செய்ய விட மாட்டீங்கிறீங்க. இப்படித்தான் பங்குச்சந்தை டாப்புல இருக்கிறப்ப டெக்னிக்கலாச் சொல்றேன், ஆடிட்டிங்க வச்சு சொல்றேன்னு சொல்லி சொல்லியே இருக்கிறவன் பணத்தையெல்லாம் போடச்சொன்னீங்க. இப்ப என்ன ஆச்சு? பணம் போட்டவனெல்லாம் தலையில கைய வச்சுக்கிட்டு உட்கார்ந்திருக்கான். அந்த சமயத்துல இடத்தை வித்து பணத்தை போட்டவனும் இருக்கான். இப்ப தங்கம் விலை ஏறறதுக்கு ஒரு காரணமா இந்த பங்குச்சந்தை நொடிச்சுப் போனதை காரணமா சொல்றாங்க. பங்குச்சந்தையும் ரியல் எஸ்டேட் தொழிலும் சரியா இல்லாத்தாலதான் எல்லோரும் தங்கம் வாங்கி வைக்கிறாங்க. அதனாலதான் ரேட் ஏறுதுங்கிறாங்க. இப்ப எனக்கு ஜோசியம் சொல்றவர்தான் ஞாபகத்துக்கு வர்றாரு. ஏன்னா அவர்தான் நடந்து போன விஷயத்தை பளிச்சுன்னு சொல்லி அதுக்கு என்ன காரணம்னு கரெக்டா சொல்வாரு. இனி நடக்க போற விஷயத்தை வானிலை அறிக்கை மாதிரி மழை வந்தாலும் வரும் வராட்டியும் இல்லங்கிற மாதிரி சொல்வாரு. அப்படி ஆயிடுச்சு கதை.
சரி, எம்பொண்ணுக்கு பவுனு எப்படி சேர்க்கிறதுன்னு ஒரு அனுபவஸ்தர்கிட்ட கேட்டேன். அவர் சொன்னாரு... 'நகை சீட்டு போட்டுடாத. நகை சீட்டு போட்டின்னா நகைக்கடைக்காரனுக்குதான் லாபம். உனக்கு லாபமில்லை. அதனால ரெண்டு மாசத்துக்கு ஒரு வாட்டி ஒரு கிராம் தங்கக் காசு வாங்கி சேர்த்து வச்சுக்க. இதை ஒரு கடமையாச் செய்யணும். ஒரு வருசத்துல ஆறு கிராம் சேர்ந்துடும். பத்து வருஷத்துக்கு அறுபது கிராம் சேர்ந்துடும். நீ வாங்கும் போது அன்னைக்கி ரேட் என்னவாயிருந்தாலும் சரி... வாங்கி வச்சுடு' அப்படின்னாரு. அதுக்கு பேரு என்னவோ சொன்னாரு. (Systematic Investment Plan) பத்து வருசத்துல அறுபது கிராம்-னா கிட்டத்தட்ட ஏழு பவுனாச்சே!! அவரு சொல்ற யோசனையும் நல்லாத்தான் இருக்கு. செஞ்சு பார்ப்போம்..."

நன்றி: அதிகாலை

srikarpagam

பணம் பத்தும் செய்யுமா?



சாதாரண இந்தியக் குடிமகனின் இன்றைய பிரச்சனை பெட்ரோல்! லாரி உரிமையாளர்கள் சில கோரிக்கைகளை வைத்து போராடுகிறார்கள்... இந்திய எண்ணை நிறுவன ஊழியர்கள் அவர்கள் பங்குக்கு சில கோரிக்கைகள் வைத்துப் போராடுகிறார்கள்... அவர்களுடைய கோரிக்கைகளுக்கு இடையே 'பெட்ரோல் டீசல்' விலையை குறைக்கச் சொல்லி ஒரு பொதுப் பிரச்சனையையும், மக்கள் நலன் சார்ந்த பிரச்சனையையும் கோரிக்கையாக வைத்திருக்கிறார்கள்.
மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலைகளை குறைத்த பிறகு லாரி உரிமையாளர்கள் லாரி வாடகையை குறைப்பார்களா என்பது அடுத்த பிரச்சனை. இந்த நிமிடம் சாதாரண இந்தியக்குடிமகனின் பிரச்சனை அதுவல்ல. அன்றாட வேலைகளையும், கடமைகளையும் செய்வதற்கு ஒரு கிலோ மீட்டர் தூரத்தைக்கூட டூ-வீலரை உபயோகப்படுத்தி பழகி விட்டார்கள். இன்றைய நிலைமையில் நடுத்தர மக்கள் என்றால் டூ-வீலரையும், கொஞ்சம் உயர்ந்தவர்கள் என்றால் கார்களையும் நம்பியே வாழ்க்கையை அமைத்துக் கொண்டார்கள். சைக்கிளில் செல்வதற்கு கவுரவம் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள். "யாரு நம்ம சரவணனா... ஹோண்டா சைன்ல வருவாரே... அவர் தானே?" என்று ட்ரேட் மார்க் ஆக்கி விட்டார்கள்.
ஆகையால் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் இல்லை என்பது பேரிடியாகவே இருக்கிறது.
ஒவ்வொரு நகர பெட்ரோல் பங்குகளில் க்யூ வரிசையில் மணிக்கணக்காக நின்று பெட்ரோல் வாங்கிச் செல்லும் போது ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.
இன்று நாம் அனைவரும் பணம், பணம் என்று பணத்தை துரத்தி செல்லும் தலைமுறையை உருவாக்கி கொண்டிருக்கிறோம். உணவு உற்பத்தித் தொழிலான உழவுத்தொழில் பக்கம் நம் இளைய தலைமுறையை செல்ல விடுவதில்லை. ஏனென்றால் அது லாபமற்ற தொழில். நம் தேவையை போல் மூன்று மடங்கு உணவு உற்பத்தி இருக்கிறது என்று கேள்விப்படுகிறோம். அதே நேரத்தில் சில ஆராய்ச்சியாளர்கள் 'இப்படியே சென்றால் உணவு உற்பத்தி குறைந்து போய், மக்களிடம் பணம் நிறைய இருந்தும் உணவு வாங்க முடியாத சூழ்நிலை ஏற்படும் ஆபத்து இருக்கிறது' என்றும் கலவரப்படுத்துகிறார்கள்.
பெட்ரோல் பங்குகளில் கூட்டத்தை பார்க்கும் போது பெட்ரோலுக்கு பதிலாக உணவுப்பொருளை வைத்து கற்பனை ஓடுகிறது. அது மாதிரி நிலையை உருவாக்காமல் இருப்பது நம் அனைவரின் கடமை அல்லவா?


நன்றி: அதிகாலை