அன்புக்கு நான் அடிமை இல்லை!!


"உங்களின் முழுமையான அன்பு எனக்கு மட்டுமே சொந்தம். என் மீது மட்டுமே அன்பு செலுத்த வேண்டும்" என்று காதலியும் மனைவியும் ஆண்களிடம் வசனம் பேசும் போது சினிமாவில் வேண்டுமானால் பார்ப்பதற்கும் கேட்பதற்கும் சுவையாகவும் இனிமையாகவும் இருக்கும். ஆனால் நிஜத்தில்...?

அவர்கள் புதிதாக மணமான தம்பதிகள். மாப்பிள்ளைக்கு தந்தை இல்லை. அண்ணன் மட்டுமே. சிறு வயதிலேயே தந்தையை இழந்த தம்பிக்கு அண்ணன் தான் எல்லாமே. அண்ணனுக்கும் மணமாகி விட்டது. ஆனாலும் தம்பி மேல் உள்ள பாசம் குறையவில்லை. அண்ணியும் நல்ல பெண்ணாக இருந்ததால் அண்ணன் தம்பிக்கு இடையில் பிளவு ஏற்படுத்தாமல் வாழ்க்கை நடத்தினாள். புதிதாக வந்த தம்பி மனைவி வந்த இரண்டு நாட்களிலேயே தனக்கு மட்டுமே உரித்தான கணவனின் அன்பு அண்ணனுக்கும் பிரிந்து போவதை சகிக்க முடியவில்லை. இதனால் கணவன் மனைவிக்கிடையில் தினசரி சண்டை சச்சரவு. கோபித்துக் கொண்டு அம்மா வீட்டுக்கு செல்லும் மனைவி... என்று குடும்ப வாழ்க்கையே நரகமாக மாறிக்கொண்டு வந்தது.
அண்ணன்காரன் இதையெல்லாம் கவனித்துக் கொண்டு வந்தவன், தனியே பிரிந்து சென்று வேறு ஒரு வீட்டில் வாழ ஆரம்பித்தான். தன்னால் கணவன் மனைவிக்கிடையில் பிணக்கு வர வேண்டாம் என்ற நல்ல எண்ணத்தில் தம்பியிடம் பேச்சை குறைத்துக் கொண்டான். தன் தம்பியிடம் அன்பு காட்டக் கூட முடியவில்லையே என்ற வருத்தம் வெகு நாட்களுக்கு அண்ணன் மனதை அறுத்துக் கொண்டே இருந்தது. முடிவில் அண்ணனுக்கு சக்கரையும், ரத்த அழுத்தமும் வந்தது தான் மிச்சம்.
அன்பை காட்டக்கூடாது என்று தடை வருவதே மிகப்பெரிய தண்டனை தான். அதை அனுபவித்துப் பார்த்தவர்களுக்குத் தான் புரியும். கணவனுக்கு மனைவி தடா போடுவது மட்டுமல்ல... மனைவிக்கு கணவனும் தடா போடுவது நடக்கத் தான் செய்கிறது. சில கணவன்மார்கள் மனைவி வழி சொந்தத்திடம் பேசக் கூடாது, பழகக் கூடாது என்று தடை விதிப்பதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. கணவன் மனைவி இருவரும் இப்படி நடந்து கொள்ள காரணம்... பணம் தான்.
அன்பைக் காட்டி அண்ணன்காரன் தம்பியிடம் பணத்தை பிடுங்கி கொள்வானோ என்று புதிதாக வந்த மருமகளுக்கு தோன்றும். அண்ணன் தம்பி அன்பு மாசு மருவற்றது என்பது, பாவம் புதிதாக வந்த மருமகளுக்கு தெரிய வாய்ப்பில்லை. அவர்கள் கண்ணோட்டம் அப்படி. தன் மனைவி வீட்டார்களிடம் அதிகம் பழக்கம் வைத்துக் கொண்டால் தன் மனைவியே தனக்குத் தெரியாமல் பணத்தை அள்ளி அள்ளி கொடுத்து விடுவாளோ என்று கணவன் நினைப்பதும் சகஜம் தான். ஆனால் அதற்காக பிறந்த வீட்டு உறவுகளிடம் பேசக் கூடாது என்று தடை போடுவதும் எந்த விதத்திலும் நியாயம் அல்ல.
உலகத்தில் தன் மேல் அன்பு காட்டுவதற்கு ஆட்கள் இல்லை. அது போல், தான் அன்பு காட்டுவதற்கு சிறந்த நபர்கள் இல்லை என்ற நிலை உள்ள மனிதன் சிறிது நாட்களிலேயே பைத்தியக்காரன் ஆகி விடுவான்.
ஒரு வாலிபன் தன் வயதுக்கு சம்மான ஒரு இளம்பெண்ணிடம் அன்பு வைத்து அது தீவிரமானால் அதுவே காதலாக மாறுகிறது. அதுவே பெற்றோர்கள் தன் மகனிடமோ அல்லது மகளிடமோ தீவிரமான அன்பை காட்டும் போது அதுவே செல்லமாக மாறுகிறது. பெற்றோர்கள் மகனிடம் அன்பை காட்டி தன் மகனிடமே அடிமையாக மாறுகிறார்கள். அவன் கோபித்துக் கொள்ளக் கூடாது என்று அதிகமாக செல்லம் கொடுத்து கெடுத்து விடுகிறார்கள். அவன் மனம் கோணக்கூடாது என்று அவன் கேட்பதையெல்லாம் வாங்கிக் கொடுக்கிறார்கள்.
இப்படி செய்யும் பெற்றோர்கள் ஒன்றை மறந்து விடுகிறார்கள். செல்லமாக வளர்க்கப்படும் குழந்தை எதிர்காலத்தில் பயந்தாங்கொள்ளிகளாக மாறுகிறது. அல்லது பிடிவாதக்காரர்களாக மாறுகிறது. வயதுகேற்ற வாழ்க்கை வாழ்வதற்கு அவர்களால் சட்டென்று மாற முடிவதில்லை. தன் வீட்டிலிருந்து மார்க்கெட்டுக்கு செல்வதற்கு கூட இந்த வழியில் செல்லலாமா அல்லது அந்த வழியில் செல்லலாமா என்று முடிவெடுப்பதில் கூட குழம்புகிறது. பிறகு எங்கே வாழ்க்கையில் பெரிய முடிவுகள் எடுப்பதில் குழம்பாமல் இருக்கும்?
ஆகவே அளவாக அன்பு காட்டுங்கள் வளமான வாழ்வை கொடுங்கள்.
வாழ்க்கையை ப்ராக்டிக்கலாக எடுத்துக் கொண்டால் எல்லாமே ஈஸி தான். தியரிக்கலாக எடுத்துக் கொண்டு செண்டிமெண்டாக வாழ்ந்தால் கஷ்டம் தான். அன்புக்கு அடிமையாக வேண்டாம். அன்பைக் காட்டுங்கள்... ஆனால் அடிமையாக மாற வேண்டாம்.

நன்றி: அதிகாலை

செண்டிமெண்ட்...


பழநி...
மாலை ஐந்து மணி!
அன்னை கிளினிக் பேஷன்ட்டுகளால் நிரம்பி வழிந்தது. தன்னுடைய கேபினில் அமர்ந்திருந்த டாக்டர் சோமசந்தர் அழைப்பு மணியை அழுத்தி அடுத்த பேஷன்ட்டை வரச்சொன்னார். உள்ளே நுழைந்தவர் ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண். நெற்றி நிறைய விபூதி அணிந்து பக்தி பழமாக காட்சியளித்தார். டாக்டர் அவரை அமரச்சொல்லி விட்டு ரிப்போர்ட்டை பார்த்தார்.
"சுகர் வந்திருக்கும்மா... சுகர் டேப்லெட் சாப்பிடணும்..." என்றார்.
"பாழாப்போன சுகர் எனக்கு வர வாய்ப்பில்லை டாக்டர். எங்க பரம்பரையிலேயே சுகர் கிடையாது. எனக்கு எப்படி வந்திருக்கும்"
"அம்மா... சுகர் வர்றதுக்கு பரம்பரையும் ஒரு காரணம்தான். ஆனா இப்ப வர்ற சுகர் எல்லாம் நாம வாழும் முறையை வைத்தும் வருதும்மா... "
"வாழும் முறைன்னா என்ன டாக்டர்?"
"முன்னே அம்மியில அரைச்சீங்க. இப்ப மிக்ஸியில அரைக்கிறீங்க! முன்னே ஆட்டுக்கல்லுல மாவாட்டினீங்க. இப்ப கிரைண்டர் அரைக்குது! முன்னே துணியை நீங்க துவைச்சீங்க. இப்ப மிஷின் துவைக்குது! இப்படி எல்லா வேலையும் மிஷின் பார்க்கிறதால உங்க உடம்புல இருக்கிற மிஷினை உபயோகப்படுத்தாம கெட்டுப் போச்சு, அதான்." என்றவர், அவரை மேலும் கீழும் பார்த்து விட்டு கடவுள் பக்தி அதிகமாக இருப்பவர் என்ற முடிவுக்கு வந்த பின், "நான் டேப்லெட் எழுதித் தர்றேன். அதை காலையில அரை மாத்திரை சாயங்காலம் அரை மாத்திரை சாப்பிடுங்க. சத்து மாத்திரையும் எழுதித் தர்றேன். அதை இரவு சாப்பிடுங்க. சர்க்கரையை ஒதுக்கிடுங்க. காப்பி டீ எல்லாத்திலும் சர்க்கரை சேர்க்க கூடாது. டெய்லி காலைல பழநி மலையை ஒரு சுத்து சுத்தி முருகனை கீழிருந்தே கும்பிட்டுட்டு வாங்க. அந்த முருகப்பெருமான் ரெண்டு மாசத்திலேயே நல்ல பலன் கொடுப்பார். அப்புறம் இங்க வாங்க மாத்திரையை குறைச்சுக்கலாம்" என்றார். அந்த அம்மாவும் சரியென்று சொல்லி விட்டு வெளியேறினார்.
இது நடந்து ஒரு மாதம் கழித்து...
அன்று வழக்கம் போல் டாக்டர் சோமசந்தர் தன் பணியை பார்த்துக் கொண்டிருந்தார். அழைப்பு மணியை அழுத்தி அடுத்த பேஷன்டை வரச் சொன்னார். அந்த சர்க்கரை வியாதி அம்மாவை கைத்தாங்கலாக ஒரு பெண் அழைத்து வந்தார்.
"ஏம்மா... என்னம்மா ஆச்சு?" என்று டாக்டர் கேட்டார்.
"தலை சுத்துதாம்..." என்றாள் அந்தப் பெண். உடனே வயதான அம்மாவுக்கு உடனடி சர்க்கரை பரிசோதனை நடத்தப்பட்டது. ரிசல்ட் சென்ற முறையை காட்டிலும் 50 பாய்ண்ட் அதிகமாக காண்பித்தது. வயதான அம்மாவை சற்று ஆசுவாசப்படுத்தி விட்டு, "எப்படிம்மா இப்படி ஆச்சு?"
வயதான அம்மா மெதுவாக பேச ஆரம்பித்தார். "டாக்டர்... நீங்க சொன்ன படி எல்லாம் செஞ்சேன். ஆனா அந்த முருகப்பெருமான் மனசு வைக்கலியே. சர்க்கரையை கண்ணுல கூட பார்க்கறது இல்ல! மலையை சுத்தி சாமி கும்பிட்டேன். அதுக்கு பலன்தான் இது!" என்றார். டாக்டருக்கு ஒன்றும் புரியவில்லை. பின்னர் சுதாரித்துக் கொண்டு...
ஒவ்வொரு கேள்வியாக கேட்டார்.
"காலையில எழுந்ததும் என்ன செய்வீங்க?"
"பல்ல விலக்கி சர்க்கரை இல்லாத காப்பி குடிப்பேன்"
"அப்புறம்?"
"நெற்றியில விபூதி பூசிட்டு நடக்க ஆரம்பிப்பேன். பக்கத்திலதான் மலை இருக்கு. அதனால கிரிவல பாதையில நடந்து ஒரு சுத்து சுத்தி முன் பக்கமா வந்து சாமியை கும்பிட்டு வருவேன்"
"அப்புறம்?"
"அப்புறம்... ஆங்... சித்தனாதன் கடையில ஒரு சின்ன பஞ்சாமிர்த டப்பா வாங்கி முருகனை மனசுல நினைச்சு சாப்பிடுவேன்"
டாக்டர் திகைத்து விட்டார். "சரியாப் போச்சு! உங்களை சாமியை கும்பிட்டுட்டு தானே வரச்சொன்னேன்... பஞ்சாமிர்தம் வாங்கி சாப்பிட சொன்னேனா?"
"அதுக்கில்ல டாக்டர்.. சாமி பிரசாதம் சாப்பிட்டா சீக்கிரம் குணமாகிடும்னு..." என்று இழுத்தார்.
டாக்டர் தலையில் அடித்துக் கொண்டார்.

நன்றி: அதிகாலை